Tuesday 8 March 2016

பதினோராம் நிகழ்வு : பொன்னியின் செல்வன் வெற்றி ரகசியம் : ஒரு பதிவு

குவிகம்  இலக்கிய வாசல்   பதினொன்றாம்  நிகழ்வு

ஒரு பதிவு 

“பொன்னியின் செல்வனின் வெற்றியின் ரகசியம்” என்ற தலைப்பில் இலக்கிய வாசலின் பதினொன்றாம் நிகழ்வு பிப்ரவரி 20, சனிக்கிழமை அன்று,  தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவக்கப்பட்டது .

சுந்தரராஜன், வந்திருக்கும் தலைமைப் பேச்சாளர்  திரு பாம்பே கண்ணன்  அவர்களையும் மற்றும் விழாவிற்கு வந்திருக்கும் அன்பர்களையும் வரவேற்றார்.




கவிஞர்  ஆரா பொன்னியின் செல்வனில் வரும் கதையுலக மாந்தர்களை வைத்து ஒரு கவிதையைப் படைத்து அதனைக்  கேட்பவர்கள் அனைவரும் ரசிக்கும் அளவிற்குப் படித்தும் காட்டினார்.   

திருமதி விஜயலக்ஷ்மி, சுந்தரராஜன்எழுதிய “ராஜராஜ சோழன் உலா” என்ற சரித்திரக் கற்பனைக் கதையை அழகாகப் படித்துக் காட்டினார்.
கவிதையும் கதையும் பின்னால் வரப் போகிற நிகழ்விற்கு மிகவும்  பொருத்தமாக இருந்தன.  


திரு பாம்பே  கண்ணன் பொன்னியின் செல்வனின் சிறப்புக்களை எடுத்துச் சொல்லி  அதன் கதை, நயம், பேராசிரியர் கல்கி அவர்களின் எளிய  நடை, பாத்திரப்படைப்பு,
சரித்திரத்தையும் கற்பனையையும் கலந்த விதம் , கதாநாயகன் வந்தியத் தேவனின்  யதார்த்த நிலை,யாராலும் கணிக்கமுடியாத அபூர்வமான வில்லி நந்தினியின் பாத்திரப் படைப்பு, 
நாட்டின் பேரரசரையும் இளவரசர்களையும் கொல்ல முயலும் சதித் திட்டம், இளவரசனின் அகோல மரணம், கொலைப் பழி விழுந்த கதாநாயகன், இப்படி எத்தனையோ  காரணங்கள் பொன்னியின் செல்வனின் வெற்றிக்குக் காரணமாகக் கூற முயன்றாலும் , இறுதியில் கல்கி அவர்கள் குறிப்பிட்ட  கடவுளின் அனுக்கிரகத்தால் தான் இப்படி ஒரு வெற்றிகரமான  நாவலைப் படைக்க முடிந்தது  என்ற கருத்தையே  வலியுறுத்தினார்.



டாக்டர் நடராஜன் , கல்கி தாசன் என்ற பெயரில் 
எழுதிக்  கல்கியில் பிரசுரமான ஒரு கவிதை அவையில் படிக்கப்பட்டது.

வந்திருந்த அனைவரும் பொன்னியின் செல்வனில் தங்களுக்குப் பிடித்தப் பாத்திரப் படைப்புக்களைப் பற்றிப் பேசினர். கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் நாவலில்  வாசகரின் வயதிற்குத் தக்கவாறு பாத்திரங்களின் பெருமை புலப்பட வைத்துள்ளார் என்பதற்கு


20 வயதில் படிக்கும் போது வந்தியத் தேவனையும்,
30 வயதில் அருண்மொழிவர்மனையும்,
40 வயதில் ஆதித்த கரிகாலனையும்
50 வயதில் பழுவேட்டரையறையும்
60 வயதில் சுந்தர சோழரையும்  
ரசிக்கும்  அளவிற்குப் பாத்திரங்களைப் படைத்துள்ளார் என்பது கூறப்பட்டது.

மொத்தத்தில் கல்கிக்கும்  பொன்னியின் செல்வன் நாவலுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக நிகழ்வு நடைபெற்றது.